"நீதி வழங்க 20 ஆண்டுகள்" வருத்தம் தெரிவித்த நீதிபதி!

"நீதி வழங்க 20 ஆண்டுகள்" வருத்தம் தெரிவித்த நீதிபதி!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதியப்பட்ட வழக்கிலிருந்து சென்னை துறைமுக அதிகாரியை விடுதலை செய்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ராஜிவ் கோலி என்பவர் சென்னை துறைமுகத்தில் 1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை பைலட், டாக் மாஸ்டர், ஹார்பர் மாஸ்டர் போன்ற பணிகளில் பணியாற்றி வந்தார். 1990 முதல் 2000ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகள் காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக 27,23, 475 ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், இது அவரது வருமனத்தை விட 71.88 சதவீதம் அதிகம் என சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

 கடந்த 2004ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  வழக்கு தொடர்பாக 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.மெஹபூப் அலி கான், சிபிஐ மற்றும் ராஜீவ் கோலி ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், வருமான விவரங்கள், வருமான வரி கணக்குகளின் அடிப்படையில்,  குறிப்பிட்ட ஆண்டுகளில் 26,53,270 ரூபாயை சம்பளமாகவே வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பள வருமானம் மட்டும் அல்லாமல் பிற சொத்துகள் மூலமாக வாடகை வருவாய், வங்கி முதலீடுகளில் வட்டி  மூலமும் வருமானம் வந்துள்ளதையும், அவரது செலவுகளையும் கணக்கிட்டு, 4,73, 683 ரூபாய் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், இது அவரது வருமானத்தைவிட 9.37 சதவீதம் மட்டுமே அதிகம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலையில் சேர்ந்தது முதல் ராஜீவ் கோலிக்கு சேமிப்பு பழக்கமும் இருந்துள்ளதாகவும், ஒவ்வொரு அரசு ஊழியரும் சேமிக்கும் அளவுக்கே இது இருப்பதாக கூறியுள்ளார். மேலும், 27 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறிய  குற்றச்சாட்டுகளை, போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கவில்லை என கூறி, ராஜிவ் கோலியை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

வருமானம் மற்றும் சொத்துகளை  கூடுதலாக மதிப்பீடு செய்யாமல், முறையான வகையில் கணக்கீடு செய்திருந்தால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்காது எனவும், மனுதாரரின் 20 ஆண்டுகால வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்காது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், தாமதத்திற்கான பழியை நீதிமன்றம் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை எனவும், நீதி வழங்க 20 ஆண்டுகள் ஆனதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்வதாகவும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மெஹபூப் அலி கான் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க:'ஒற்றை பதவி'க்கு அடித்துக்கொள்ளும் மதிமுக நிர்வாகிகள்!