கணவன் - மனைவி இடையே பிரச்சனை... மாமனாரிடம் சண்டையிட்டு வந்த மருமகன்... வீட்டிற்கு தீ வைத்து விட்டதாக மாமனார் புகார்..!

வீட்டிற்கு மருமகன் தீ வைத்து விட்டதாக காவல் நிலையத்தில் மாமனார் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் - மனைவி இடையே பிரச்சனை... மாமனாரிடம் சண்டையிட்டு வந்த மருமகன்... வீட்டிற்கு தீ வைத்து விட்டதாக மாமனார் புகார்..!

சேலம் மாவட்டம்  வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். லாரி ஓட்டுனர் இவருக்கு திலகம் என்ற மகள் உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குபிறகு திலகத்திற்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் திலகம் கணவனிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதை ஏற்க மறுத்த இளவரசன், தனது மாமனாரான சங்கர் வீட்டிற்கு சென்று அவரிடம் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில், சங்கர் குடும்பத்தோடு அருகிலுள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது கூரை வீடு தீப்பற்றி எரியவே, அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், சங்கருக்கும், வாழப்பாடி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர்.

ஆனால் அதற்குள் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் மருமகன் இளவரசன் மீது மாமனார் சங்கர் வாழப்பாடி போலீசில் புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார்  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.