டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்... 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்... 

லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கடலூர், சேலம், ஈரோடு, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

நாளை கடலூர், சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. ஒரு சில சமயங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.