நியாயமான நீதி வேண்டுமென்றால்...செல்போனை ஒப்படைக்க வேண்டும்...நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நியாயமான நீதி வேண்டுமென்றால்...செல்போனை ஒப்படைக்க வேண்டும்...நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கள்ளக்குறிச்சி பள்ளியில் மரணமடைந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கும்படி மாணவியின் தந்தைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:

கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தில் நியாயமான விசாரணைக் கோரி தந்தை ராமலிங்கம் வழக்கு தொடந்திருந்தார். அந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம், அதன் அறிக்கைகளை பெற்று ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிறப்பு புலன் விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி ஆகியவற்றின் அறிக்கைகளை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார். 214 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போன் விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: விளைநிலங்கள் தண்ணீரில்...விவசாயிகள் கண்ணீரில்...தமிழக அரசுக்கு கோரிக்கை!

மனுதாரர் ராமலிங்கம் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி, தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் செல்ஃபோனை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்றில்லை எனவும்,  அதை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். உடற்கூறாய்வு முறையாக நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்றும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய செல்போன் உரையாடல்களும் விசாரணைக்கு அவசியம் என தெரிவித்ததுடன்,  நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர் தனது மகள் பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செல்போனை ஒப்படைத்தது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய பெற்றோருக்கும், அதை ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்ய காவல் துறைக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.