முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றம்...
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் அடம் பிடிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் எதிர்ப்பை மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் முடிவில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்ததுடன். கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.மேலும் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று வழங்கவும் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.