" கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்...? " கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்...!

" கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருந்தது ஏன்...? " கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்...!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடியின் உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 5000 சதுர அடி கட்டுமானம் மேற்கொள்ள திட்ட அனுமதி பெற்று விட்டு, 12 ஆயிரம் சதுர அடிக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை  சுட்டிக்காட்டி, இந்த விதிமீறல்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சொந்தமான தரைதளம் குடியிருப்பு பயன்பாட்டுக்கு அல்லாமல் வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விதிகளை மீறி குறிப்பிட்ட கட்டிடம் கட்டிய, 1997 ஆம் ஆண்டு முதல்  கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருந்த மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்ட பிறகு திடீரென விழித்துக் கொள்ள காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிப்பதற்கு காரணமான மனுதாரருக்கு அதிகாரிகள் மிரட்டல் விடுத்த ஆடியோ பதிவு குறித்தும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் யார் என்ற விவரங்களை நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்பில் விதிமீறி கட்டப்பட்டுள்ள மூன்றாவது தளம் தவிர்த்து மற்ற இரு தளங்களுக்கும், தரை தளத்துக்கும் வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும், தரைதள விதி மீறல்களை  சரி செய்ய மனுதாரருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : குடும்ப தகராறில் ஏற்பட்ட விபரீதம்..! கர்ப்பிணி மருமகள் மீது தீ வைத்த மாமனார்...!