திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்திவிழா... இந்து முன்னணி அறிவிப்பு ...

தமிழகத்தில் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என இந்து முன்னணி சார்பில் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்திவிழா... இந்து முன்னணி அறிவிப்பு ...

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக சென்னை மாம்பலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து முன்னணி சார்பில் வழிபாடு நடத்தும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கூறுகையில், இந்துக்களின் வழிபாட்டு முறையை ஒடுக்கும் விரோதப் போக்கை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக குற்றஞ்சாட்டினர். இந்துக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை தங்கள் இல்லங்களிலும், சிலைகளை ஊர்வலமாக சென்று வழிபாட்டை மேற்கொள்வார்கள். கொரோனாவை கடந்த இரண்டு வருடங்களாக காரணம் காட்டி தமிழக அரசு விநாயகரின் விழாவிற்கு தடை விதித்து வருவதாக தெரிவித்தனர்.

எனவே ஏற்றத்தாழ்வு இல்லாமல் நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அவர்கள், இந்து முன்னணி சார்பில் திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா நிச்சயம் நடைபெறும் என்றனர்.