ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் பாடுபடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு திமுக அரசு என்றும் பாடுபடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
தருமபுரி மாவட்டம் வத்தல்மலை கிராமத்தில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளுடன் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய மு.க. ஸ்டாலின், பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து திமுக அரசு கொரோனா தொற்றை கட்டுபடுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
திமுக அளித்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்த அவர், மீதமுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.\
சாலை வசதிகள் போக்குவரத்து வசதிகள் மகளிர் சுய உதவி குழுவுக்கும் மானிய கடன், சுழல் நிதி, வங்கி கடன் ஆகியவற்றை தங்களது ஆட்சி காலத்தில் செய்து தந்துள்ளதை கூட்டிக்காட்டிய முதலமைச்சர், கடந்த 10 ஆண்டுகளாக இவைகள் அனைத்தும் மக்களுக்கு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
தற்போது மீண்டும் புத்துணர்வுடன் மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்படும் என்று கூறிய அவர்,மக்கள் தேவை அறிந்து செயல்பட கூடிய அரசு தான் திமுக என்றும் பெருமிதம் தெரிவித்தார்.