தஞ்சை தேர் திருவிழா விபத்து.. நேரில் சென்ற முதலமைச்சர்.. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி!
தஞ்சை களிமேடு தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் முக ஸ்டாலின், விபத்து நடந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார் .
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்ட ஸ்டாலின் அங்கிருந்து சாலை மார்க்கமாக விபத்து நடந்த களிமேடு கிராமத்துக்கு சென்றார். அங்கு வீடுகளில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்த உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய அவர், தமிழக அரசு அறிவித்த 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் எரிந்த நிலையில் இருந்த தேரை பார்வையிட்ட அவர், அதிகாரிகளிடம் விபத்து நடந்த விதம் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சென்ற அவர், அங்கு தேர் திருவிழாவில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், உயர்தரமான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டார்.