நாளை மறுதினம் தமிழக அமைச்சரவை கூட்டம்... திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படுமா..?
வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணம் அறிவிப்பு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் தமிழகத்தில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை சற்று குறைந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சேதமான பயிர்களுக்கு அவர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நாளை மறுதினம் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு, நிவாரண அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டுள்ளார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படுவதோடு, பல திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.