இலவச திருமணம்: திட்டச் செலவினத் தொகையை உயர்த்திய தமிழக அரசு...!

இலவச திருமணம்:  திட்டச் செலவினத் தொகையை உயர்த்திய தமிழக அரசு...!

தமிழக அரசின் சார்பில் திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான திட்டச் செலவினத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை, எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில்களில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி, ஏழை எளிய மக்களுக்கு 20,000 ரூபாய் செலவில் அரசின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும். இதற்காக மணமக்களுக்கு 2 கிராம் திருமாங்கல்யம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டாரை சேர்ந்த 20 நபா்களுக்கு விருந்து, மாலைகள், சீா்வரிசை பாத்திரங்கள் உள்பட ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்யப்படும்.

எனவே, இத்திட்டத்தின் கீழ் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவோர், அப்பகுதியில் உள்ள கோயில்களில் பதிவு செய்து உரிய ஆவணங்கள் சமர்பித்து திருமணம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்க : காங்கிரஸ் வேட்பாளரை தகுதி நீக்க வேண்டும்...நாதக வேட்பாளர் மேனகா வலியுறுத்தல்!

இந்நிலையில், திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மணமக்களுக்கு 2 கிராமிலிருந்து 4 கிராமாக உயர்த்தி திருமாங்கல்யம் வழங்கப்படும் எனவும், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, மணமகன், மணமகள் வீட்டாா்களுக்கு 20 நபா்களுக்கு விருந்து, மாலைகள், பீரோ -1, கட்டில்-1, மெத்தை, கைக்கடிகாரம் - 2, மிக்ஸி-1 உள்ளிட்ட சீா்வரிசை பாத்திரங்கள் உள்பட ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்யப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.