நாளை கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டம்: நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு...

ஸ்டாலின் தலைமையிலான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அதில் நீட் தேர்வு உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டம்: நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு...

தமிழகத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து புதிய ஆட்சி அமைந்தது. இதனை தொடர்ந்து 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் நாளை தொடங்க உள்ளது. ஆங்கிலத்தில் ஆளுநர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அவை நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது பற்றி முடிவு செய்யப்படும்.

சட்டசபைக்கு வரும் அனைத்து எம்.எல். ஏ.க்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை செய்த பிறகுதான் அனுமதிக்கப்படுவார்கள். மேலும், சட்டசபையில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அத்தோடு கொரோனா பரவல் தடுப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சட்டசபையில் கடைபிடிக்கப்படும்.

இந்த கூட்டத்தொடரில் நீட் தேர்வு உள்ளிட்ட சில பிரச்சினைகள் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது போல தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.