மேகதாது அணை விவகாரம்: மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அனைத்து கட்சி குழு நாளை டெல்லி பயணம்
மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு அடம்பிடித்து வருகிறது. இதற்கு தமிழகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இது தொடர்பாக விவதிக்க கடந்த 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக விவசாயத்தை பாழாக்க துடிக்கும் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தப்பட்டது.
மேலும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மான நகலை மத்திய அரசிடம் நேரடியாக கொடுப்பதற்கு அனைத்து கட்சி குழு டெல்லி செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மேகதாது அணை விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அனைத்து கட்சி குழு நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணைக்கு எதிரான தீர்மான நகலை வழங்க அனைத்து கட்சி குழு திட்டமிட்டுள்ளது.