தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்... தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு...
தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, அரசிதழிலில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் உதயமானது.
தாம்பரத்தை மையமாகக் கொண்டு அருகில் உள்ள பகுதிகளை இணைத்து புதிய மாநகராட்சியை உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்றது. சமீபத்தில் தாம்பரம் மாநகராட்சிக்கான காவல் ஆணையர் நியமிக்கப்பட்டார்.
பல்லாவரம், பம்மல் , செம்பாக்கம், அனாகபுத்தூர் உள்ளிட்ட 5 நகராட்சிகள், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், திருநீர்மலை, பீர்க்கன்கரணை உள்ளிட்ட 5 பேரூராட்சிகளை ஒன்றிணைத்து, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 15 கிராம ஊராட்சிகளும் அடங்கும். இதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, தமிழகத்தின் 20-வது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை, அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது.