கண் கலங்கி நின்ற ஓ.பி.எஸ். - கைகளை பிடித்து ஆறுதல் கூறிய டி.டி.வி. தினகரன்...

மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடலுக்கு இ.பி.எஸ்., டிடிவி தினகரன், அண்ணாமலை, உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

கண் கலங்கி நின்ற ஓ.பி.எஸ். - கைகளை பிடித்து ஆறுதல் கூறிய டி.டி.வி. தினகரன்...

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று காலமானார். இதனையடுத்து, சொந்த ஊரான பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள விஜயலட்சுமி உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி, அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வீரமணி, சம்பத், செம்மலை, நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர், ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமியின் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண் கலங்கி நின்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கைகளை பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். இதைப்போல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்களும், விஜயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.