வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

வன்னியர் சமுதாயத்துக்கு 10 புள்ளி 5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வன்னியர்களுக்கான  10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டுக்கு தடை  விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு...

தமிழ்நாட்டில் வன்னியர்  சமுதாயத்துக்கு  கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 புள்ளி 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக, சென்னையை சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

இந்த மனுக்கள் நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 10 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு, கல்வியில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் எனத் தெரிவித்தார். மேலும் உரிய கணக்கீடு இல்லாமல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டு, அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதாடினார்.  

ஆனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை முழுமையாக விசாரித்த பின்னரே, ரத்து குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவோடு இதையும் இணைத்து உத்தரவிட்டனர்.