5 மாணவர்கள் தற்கொலை...! எங்களுக்கு பெரிய அடி...!! ஐஐடி இயக்குநர் காமகோடி...!!
ஐந்து மாணவர்கள் தற்கொலை என்பது எங்களுக்கு பெரிய அடி என்றும் ஐஐடியில் தற்கொலைகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அறிவித்துள்ளார்.
முன்னாள் மாணவர்களின் பங்களிப்புடன் வீணா மற்றும் பிரதாப் சுப்ரமணியம் டிஜிட்டல் நுண்ணறிவு, பாதுகாப்பு வன்பொருள் மற்றும் கட்டிடக்கலைக்கான மையத்தின் திறப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார். மேலும் ஐஐடி இயக்குனர் காமகோடி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஐடி இயக்குனர் காமகோடி மென்பொருள் தயாரிப்பில் சென்னை ஐஐடி முக்கிய கண்டுபிடிப்புகளை கொண்டுவந்துள்ளதாகவும் டிஜிட்டல் நுண்ணறிவு, பாதுகாப்பு வன்பொருள் மற்றும் கட்டிடக்கலைக்கான மையம் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என்றார். மேலும், ஐஐடி மாணவர்களின் தொடர் தற்கொலைக்கு பதிலளித்த அவர் ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும் ஐந்து தற்கொலை என்பது எங்களுக்கு பெரிய அடி என்றும் கூறினார்.
மேலும் 'Happy for you' என்ற இணையதளம் மூலம் கவுன்சலிங் வழங்கி வருகிறோம் எனக் கூறிய அவர் மாநில அரசின் உதவியுடன் மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி அவர்களது புகார்களை பதிவு செய்யலாம் என்றார். மேலும் கேட் கீப்பர் ட்ரைனிங் என்னும் பயிற்சி நடத்த தொடங்கி இருக்கிறோம் என தெரிவித்த அவர் அதில் பேரசிரியர்கள் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாகக் கூறினார்.