ஆபத்தை உணராமல் ரயில் பயணம் செய்யும் மாணவர்கள்...! விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்...!
அபாயகரமாக ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
கடந்த சில நாட்களாகவே ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற பயணங்களால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. இது தொடர்பாக சென்னை மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தினர்.
அதில், மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போது எப்படி இருக்க வேண்டும்; முதலில் ரயில் நிலையத்திற்கு வரும்பொழுது என்னென்ன நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பர்சா பிரவீன் விளக்கினார். அதில் முக்கியமாக படிக்கட்டில் பயணம் செய்வது, ஸ்கேட்டிங் செய்வது, அத்துமீறி உள்ளே நுழைவது மற்றும் கற்களை கொண்டு எறிவது உள்ளிட்ட பழக்கங்களை மாணவர்கள் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் இது போன்ற தவறுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் சட்டப்படி என்னென்ன தண்டனைகள் பதியும் என்பது குறித்தும் விளக்கமாக ஆய்வாளர் எடுத்துரைத்தார்.
மேலும், தண்டவாளத்தை கடக்கும் போது 500 ரூபாய் அபராதம், மகளிர் பெட்டியில் ஏறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும்; அதேபோன்று ரயில்வே தண்டவாளத்தில் கற்களை எரியும் நபர்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை உள்ளிட்ட விதிகளை பற்றி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : இந்தோனேசியா நிலநடுக்கத்தில் அதிகரித்த பலி எண்ணிக்கை...தொடரும் மீட்பு பணிகள்!!!