பாஜக கூட்டணி பற்றி நான் பேசியதை சிலர் திரித்து விட்டார்கள்.!  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்.! 

பாஜக கூட்டணி பற்றி நான் பேசியதை சிலர் திரித்து விட்டார்கள்.!  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம்.! 

பாஜக குறித்து பேசியது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்றும்   கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

இரு நாட்களுக்கு முன் விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம் "அதிமுக தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம்  பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம்" எனக் கூறி அரசியல் அரங்கை பரபரப்பாகியுள்ளார். 

இதற்கு பதிலளித்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன்,"கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் பாஜகவிற்கு சிறுபான்மை மக்கள் வாக்களித்துள்ளனர்.

எங்கள் கட்சித் தொண்டர்கள்கூட தேர்தல் தோல்விக்கு அதிமுகதான் காரணம் என்று நினைக்கின்றனர். அதேபோல அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளைச் சொல்ல முடியும். இது அதிமுகவின் தலைமை முடிவா என்று பார்க்கவேண்டும். இதுகுறித்துப் பழனிசாமி, பன்னீர் செல்வம் கருத்துத் தெரிவிக்கும்போது பாஜக இதற்கு பதில் சொல்லும். பாஜகவுக்கு எல்லோரும் வாக்களிக்கிறார்கள்.

சிறுபான்மை மக்கள் வாழும் ஜம்மு - காஷ்மீரில் 25 எம்.பி.க்கள் வெற்றிபெற்றுள்ளனர். அரசியல் தெரிந்தவர்கள் இப்படிக் குற்றம் சாட்டமாட்டார்கள். இவர் தோற்றதற்கு பாஜகவைக் குற்றம் சாட்டுவதை ஏற்கமுடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி குறித்துத் தேதி அறிவித்த பின்பு மத்திய, மாநிலத் தலைமை முடிவெடுக்கும்" என்று கே.டி.ராகவன் தெரிவித்தார். 

இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்ள இந்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பெரிதாவதை உணர்ந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாரதிய ஜனதா கட்சி மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி தொடர்பாக எவ்வித மாற்றுத் கருத்திற்கும் இடமில்லை என்று கூறி இந்த சர்ச்சைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த விவகாரம் பெரிதானதைத் தொடர்ந்து, பாஜக குறித்த பேசியது தனது  தனிப்பட்ட கருத்து என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பேசிய அவர் பாஜக குறித்து பேசியது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தாம் கூறிய கருத்தை திரித்து சில பத்திரிகையில் செய்தி வெளியிட்டதாகவும்  தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது  என்று  கூறினார்.