தமிழ்நாட்டில் இத்தனை ஊழல் வழக்குகளா... என்ன செய்யப் போகிறது நீதித்துறை!!!

தமிழ்நாட்டில் இத்தனை ஊழல் வழக்குகளா... என்ன செய்யப் போகிறது நீதித்துறை!!!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 1983ம் ஆண்டு முதல் 2021 வரை 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துனராக பணியாற்றிய அண்ணாதுரை என்பவர், 2018ம் ஆண்டு ஓய்வுபெற்ற நிலையில், இதுவரை தனக்கு வழங்க வேண்டிய ஓய்வு பலன்களை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கு விசாரணை:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதும் 1983ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை பல்வேறு நீதிமன்றங்களில் 1,635 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த அறிக்கையை மேற்கோள்காட்டி, ஊழல் வழக்குகள் நீண்ட காலத்துக்கு  நிலுவையில் வைத்திருந்தால் ஊழல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்  சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடுவர் எனத் தெரிவித்தார்.

விரைவான விசாரணை:

இது ஊழல் தடுப்பு சட்டத்தின் நோக்கத்தையே வீழ்த்திவிடும் எனத் தெரிவித்த நீதிபதி,  தேவையில்லாமல்  ஊழல் வழக்குகளை தள்ளி வைக்காமல் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பு:

இந்த வழக்கை பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகால பலன்களை பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீத பலன்களை வழங்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    காளையை அவிழ்த்து விட்ட பாஜக... சிதறிய தொண்டர்கள்... சாதகமாக்கிய கெலாட்!!!