பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பாலியல் வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனு 2-வது  முறையாக தள்ளுபடி..!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், தலைமறைவான சிவசங்கர் பாபாவை, சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி, அவரை டெல்லியில் வைத்து கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவிற்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் தன்மையில் எந்தவித மாற்றமுமில்லை எனக்கூறி சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.