பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது:

புதுப்பேட்டை, ஆயுதப்படை வளாகத்தில் சென்னை பெருநகர காவல், காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கியின் (Lift) இயக்கத்தை துவக்கம் மற்றும் தொடுதிரை வசதி,  (KIOSK), Online Payment  வசதிகளையும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி சைலேந்திரபாபு, கடந்த ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாகவும், அனைத்து காவல்துறையினரின் கடும் உழைப்பில் தமிழ்நாட்டில் அமைதி நிலை நிறுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை:

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒரு ஆண்டில் 250 காவல்துறையினர் பணியின் போது உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அண்ணா என்பது பெயர் அல்ல உறவு...கமல்ஹாசன் பேச்சு!

மேலும், போதை பொருள் கடத்தலை கட்டுபடுத்த தமிழக காவல்துறை மிகசிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா வேட்டை ஆப்ரேஷன் 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறதாகவும்,  வெளி நாடுகளிலிருந்து போதை பொருள் கடத்தலை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கேள்வி எழுப்பிய நிரூபர்கள்:

தொடர்ந்து, விருகம்பாக்கம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்வதற்கு ஏன் தாமதம் செய்யப்பட்டது? பல்வேறு கட்சியைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் கருத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

பதிலளித்த டிஜிபி:

அதற்கு பதில் அளித்த டிஜிபி சைலேந்திரபாபு, யாருடைய கருத்துக்கு பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும் வேண்டுமென்றால் எஃப் ஐ ஆர் காப்பியை வாங்கி உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார்.