75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தீவிர சோதனை!!

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் தீவிர சோதனை!!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர்.

கோவையில் பாதுகாப்பு பணி தீவிரம்

நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் சுதந்திர தினத்தன்று வ.உ.சி பூங்கா மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். இதனால் மாநகரில் 1,500 போலீசாரும், புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையத்தில் தொடர் சோதனை

இதனை தொடர்ந்து கோவையில் விமான நிலையம்,ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. ரயில்வே நடைமேடைகள், கோவை வந்து செல்லும் ரயில்களின் கோச்சுகள் ஆகிய இடங்களில் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுகின்றன.

ரயில் நிலையத்திற்கு வரும் பார்சல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.  மேலும், சிசிடிவி கேமராவும்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.