விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்... பல்லடம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை...

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி பல்லடம் பேருந்து நிலையம் எதிரே இயங்கிய இரண்டு மொபைல் ஷோரூம்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு.

விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்... பல்லடம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை...

தமிழகம் முழுவதும் தொற்றுநோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தொற்று அதிகம் உள்ள மற்றும் குறைவாக உள்ள பகுதிகளில் அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து வகையான வணிக நிறுவனங்களும்,செல்போன் ஷோரூம்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அரசின் விதிமுறைகளை மீறி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் எதிரே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுப்ரீம் பேரடைஸ் மற்றும் பூர்விகா மொபைல்ஸ் ஆகிய பல ஆயிரம் சதுர அடிகள் கொண்ட மொபைல் ஷோரூம் கடைகள் இரண்டும் 8 மணி வரை திறந்து வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் பெருமளவில் அனுமதிக்கப்பட்டு மொபைல் போன்கள் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் விநாயகம்,நகராட்சி பொறியாளர் சங்கர், மேற்பார்வையாளர் நாராயணன் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று நகராட்சி அதிகாரிகள் கடையினுள் இருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு இரண்டு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் விநாயகம் கூறுகையில் அரசு விதிமுறைகளை மீறி பல்லடம் நகரில் எந்த கடைகளும் இயங்க கூடாது என்றும் இதுபோல் கடைகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.