சத்தியமங்கலம் : பூக்களின் விலை அதிகரிப்பு...! விவசாயிகள் மகிழ்ச்சி...!

பூக்களின் வரத்து குறைவு காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ. 2100 க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் : பூக்களின் விலை அதிகரிப்பு...!  விவசாயிகள் மகிழ்ச்சி...!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை பூ, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். 

இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மல்லிகை பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் ரூ. 900 வரை விற்பனையாகி வந்த நிலையில் பூக்களின் வரத்து குறைந்ததன் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்து கிலோ ரூ.2100 க்கு விற்பனையானது. பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம் கிலோ ஒன்றுக்கு மல்லிகை பூ ரூ.1225 முதல் ரூ. 2100 க்கும், முல்லைப்பூ ரூ.368 முதல் ரூ. 400 க்கும், செண்டு மல்லி ரூ.38 முதல் ரூ.135 க்கும், கோழிகொண்டை ரூ.16 முதல் ரூ.88 க்கும், ஜாதி முல்லை ரூ. 400 முதல் ரூ. 500 க்கும், கனகாம்பரம் ரூ. 400 க்கும், சம்பங்கி ரூ. 90 க்கும், அரளி ரூ. 220 க்கும், துளசி ரூ. 40 க்கும், செவ்வந்தி ரூ.180 க்கும் விற்பனையானது.