ஆடியோ வெளியிட்டு சமோசா வியாபாரி தற்கொலை..! ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே சமோசா வியாபாரியின் தற்கொலைக்கு காரணமான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திசையன்விளை அருகேயுள்ள மகாதேவன் குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. சமோசா வியாபாரம் செய்து வந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சுடலைமணி திடீரென விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் தற்கொலைக்கு முன்னதாக தனது தற்கொலைக்கு, திசையன்விளை காவல் ஆய்வாளர் தான் காரணம் எனக்கூறி ஆடியோ வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.