திறந்தவெளியில் கள்ளசாராயம் விற்பனை...கல்லா கட்டும் சமூக விரோதிகள்...கண்டுகொள்ளாத காவல்துறையினர்

புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட கள்ளசாராயம் நாகை அருகே திறந்தவெளியில் விற்பனை செய்யப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

திறந்தவெளியில் கள்ளசாராயம் விற்பனை...கல்லா கட்டும் சமூக விரோதிகள்...கண்டுகொள்ளாத காவல்துறையினர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தமிழ்நாட்டை விட குறைந்த விலையில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியுள்ள நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் உள்ளவர்கள் அங்கு சென்று குறைந்த விலையில் மது அருந்தி வருகின்றனர்,

அதுமட்டுமல்லாது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் திருவிழா கூட்டம் போல் எப்போதும் காணப்படும். இங்கு குறைந்த விலையில் மதுபானங்கள் விற்கப்படுகிறது.

அப்படி குறைந்த விலைக்கு விற்க்கப்படும் மதுபானங்கள் வாங்குவோர் அதனை  தமிழக பகுதியில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நான்கு சக்கர வாகனம் மூலமாகவும் இருசக்கர வாகனம் மூலமாகவும் கடத்திச் சென்று விற்பனை செய்து பெரும் வருவாயை ஈட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பில்லாலி அடுத்த அனவசநல்லூர் விவசாய நிலத்திற்கு செல்லும் வரப்பு பகுதியில் வெள்ளைநிற சாக்கில் வைத்து  பாண்டி சாராய பாக்கெட்டுகளை வெட்டவெளியில் அச்சமின்றி விற்பனை செய்து வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தெரிந்தும் அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி இருக்கும் சமூக ஆர்வலர்கள் இப்பகுதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதிலும் இதேபோல் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருவது காவல்துறையினரின் அனுமதியோடு தான் என குற்றச்சாட்டுகின்றனர்.

ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பெருமளவில் ஏற்படும் குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்பனைசெய்யும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.