கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிவாரணம்... உடனே வழங்க உத்தரவு...
கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.
சில மாநிலங்களில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்திருந்திருந்தன. ஆனால் இதுபோன்ற இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்காமல் இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.