பிரசித்தி பெற்ற இந்த 5 கோவில்களுக்கு விரைவில் ரோப் கார் வசதி

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 5 முக்கிய கோவில்களில் விரைவில் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  
பிரசித்தி பெற்ற இந்த 5 கோவில்களுக்கு விரைவில் ரோப் கார் வசதி
Published on
Updated on
1 min read

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்..தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து, தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், மருதமலை கோவிலில் வயது முதிந்தோர் வசதிக்காக மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோவில்கள் மட்டுமே பிரசிதிப்பெற்ற கோவில்களாக கருதப்பட்டதாக குறிப்பிட்ட அவர், தற்போது 539 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் முக்கிய மலைக் கோவில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழிக்குன்றம், திருச்சி, திருச்சங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக "ரோப் கார்" வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார். திருக்கோவில்களில் காணிக்கையாக வந்த 2 ஆயிரம் கிலோ தங்கம் எந்த பயனும் இன்றி தேங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை அனைத்தும் வைப்பு நிதியாக போடப்பட்டு அதில் வரும் வட்டி, கோவில் பணிகளுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழகத்தின் புராதாண சிலைகள் 2 அமெரிக்காவிலும், 1 சிங்கப்பூரிலும் இருப்பதாக கூறிய அவர், விரைவில் அவை தமிழகம் கொண்டு வரப்படும் எனவும் உறுதியளித்தார். தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் முறையாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், 180 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com