மழைகாலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்காது: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையில் பருவ மழைக்கு முன்பு மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் அகற்றும் பணிகள், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் திடக் கழிவுகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

மழைகாலத்தில் சாலைகளில் தண்ணீர் தேங்காது: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

சென்னையில் பருவ மழைக்கு முன்பு மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் அடைப்புகள் அகற்றும் பணிகள், நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் திடக் கழிவுகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு பருவ மழைக்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. பருவ மழைக்கு முன்பு நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கும் திடக்கழிவுகள், கட்டட கழிவுகள், மழை நீர் வடிகால் அடைப்புகள் அகற்றும் பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியும், கழிவு நீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியமும் தொடங்கியுள்ளது.கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற தீவிர தூய்மை பணிகள் மூலம்  3 ஆயிரத்து 260 மெட்ரிக் டன் குப்பை கழிவுகளும், 10 ஆயிரத்து 85 மெட்ரிக் டன் கட்டட கழிவுகள் என 13 ஆயிரத்து 345 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.  சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் வரும் 26ம் தேதி வரை தீவிர தூய்மை படுத்தும் பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேப் போல் சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம்  கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 454 கழிநீர் அகற்று வாகனங்கள் மூலம் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 4200 கிமீ தொலைவிற்கு கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரம் முகப்பு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. முகப்பு பகுதிகளில் உள்ள அடைப்புகளை சிறிய வாகனங்கள் மூலமும் ஒரு முகப்புக்கும் மற்றொரு முகப்புக்கும் இடைபட்ட பகுதியில் உள்ள அடைப்பை சரி செய்ய நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

மழை நீர் தேங்கும் என ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அந்த பகுதிகளில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பருவ மழையின் போது மழை நீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது