கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 80 வயது மூதாட்டி மீட்பு; குடும்பத்துடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீட்டில் கோபித்துக் கொண்டு 30 கிலோமீட்டர் தூரம் நடந்து மயிலாடுதுறையில் சாலையில்  கிடந்த  80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் சேர்த்து வைத்த சமூக ஆர்வலர்கள்.

கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய 80 வயது மூதாட்டி மீட்பு; குடும்பத்துடன் சேர்த்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!

வீடுவரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என அன்றே கண்ணதாசன் எழுதினான். சிறு வயதில் இருந்தே, நாம் நடக்க பழகுவது முதல், பள்ளி செல்லும் வரை, ஏன் வேலைக்கு சென்று முதல் சம்பளம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கும் வரை, நமது பெற்றோர் தயை தேவைப்படுகிறது. ஆனால், நமக்கென்று ஒரு வாழ்க்கை உருவான பிறகு, அவர்களை நட்டாத்தில் விடுவது நியாயமா? அப்படி தயையின்றி தவித்து வந்த 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்த நெகிழ வைக்கும் சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.

திருவாரூர் மாவட்டம்  வாழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனம். 80 வயதான இவர், கணவன் மற்றும் மகனை இழந்த நிலையில் மருமகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக, தனது பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு நடந்தே வந்து சேர்ந்துள்ளார். சாலையில் செல்வோர் வாங்கித் தரும் உணவை அருந்திவிட்டு சாலையிலேயே படுத்து உறங்கி வந்தார்.

இவரது நிலைமையை கண்ட மயிலாடுதுறை சமூக சேவகர்கள், இவரிடம் விவரங்களை விசாரித்து பெரம்பூரைச் சேர்ந்த தொண்டு நிறுவன நிர்வாகி பாரதிமோகன் என்பவருக்கு புகைப்படத்தை செல்போனில் அனுப்பி உள்ளனர். இவரது சொந்த கிராமத்திற்கு சென்று விசாரித்த போது, கடந்த மாதம் முதல் பேரனை பார்க்கச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், அன்று முதல் பல்வேறு இடங்களில் தாங்கள் அவரை தேடி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து குடும்பத்தினரை அழைத்து வந்து மூதாட்டிக்கு சேலை துணிமணிகள் மற்றும் குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்து, அந்த மூதாட்டியை குடும்பத்திடம் ஒப்படைத்தனர் சமூக சேவகர்கள். மேலும், வயதானவர்களை பொறுப்புடன் கவனித்து வரவேண்டும் என்று அறிவுரை கூறி காவல்துறை முன்னிலையில் வீட்டிற்கு அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.