50% பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்கலாம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை

கொரோனா தொற்று குறையாத மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அளிக்க வேண்டாம் என, முதலமைச்சர் ஸ்டாலின் உடனான ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

50% பயணிகளுடன் பேருந்து சேவையை அனுமதிக்கலாம்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும் 21-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக, மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் போது, தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்கலாம் என பரிந்துரை அளித்துள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ள மருத்துவ வல்லுநர் குழு, தொற்று குறைந்த மாவட்டங்களில் பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் மால்களை திறக்கவும், 60 வயது மேற்பட்டவர்கள் மற்றும் வணிகர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவ வல்லுநர் குழுவுடனான ஆலோசனை முடிந்த நிலையில், உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில்  கூடுதல் தளர்வுகள் என்னென்ன? என்பது குறித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.