உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம் ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் விழுப்புரம் நெல்லை வேலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 தேதிகளில் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் வாக்குப்பதிவு அமைதியாகவும், எந்தவித அச்சுறுத்தலும் இன்றி முழு சுதந்திரத்துடன் வாக்காளர்கள் வாக்களிக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தங்களது தொண்டர்கள், அனுதாபிகள் இடையே ஏற்படும் மோதலையும், பதட்ட நிலையையும் தவிர்க்க வாக்குச்சாவடிகளுக்கு அருகே கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..,
மேலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி சீட்டு பெற்றவர்கள் தவிர வேறு எவரும் வாக்குச் சாவடிக்குள் நுழையக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், வாக்களிப்பதை தவிர வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் பதவியில் இருக்கும் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.