பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு...

அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதை ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலம் பிரதமர் மோடி சாத்தியப்படுத்தியுள்ளார் - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன... மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு...

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக, நூற்றாண்டு விழாவையொட்டி டி.எம்.பி. வங்கியின் பிரத்யேக தபால்தலை மற்றும் பிரத்யேக அஞ்சல் அட்டையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தொடர்ந்து நடமாடும் ஏ.டி.எம். வாகனம் மற்றும் தடுப்பூசி வாகன சேவையையும் அவர் தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், வங்கித் துறையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பொதுத்துறை வங்கிகளில் 2018 ஆம் ஆண்டுவரை பல்வேறு விதமான பிரச்சனைகள் இருந்தன. பல இடங்களில் கடன்கள் திரும்பி வராத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு வளர்ச்சி நிதி துறையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக தற்போது பொதுத்துறை வங்கிகள் இயல்பு நிலைக்கு வந்துள்ளன. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் வங்கி துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தூத்துக்குடியில் இருந்து கொண்டே பல கிராமங்களுக்கு வங்கி சேவையை கொடுக்க முடியும் என்ற அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 

ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வைப்பு தொகை இல்லாமல் அனைவரும் வங்கி கணக்கு பாரத பிரதமர் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை கொண்டு வந்தார். இந்த கணக்கு தொடங்கப்பட்டது மூலமாகவே இன்றைக்கு சிறு வணிக கடன், முத்ரா வங்கி கடன் என பலவித கடன்களை சிறு சிறு  வணிகர்களும் பெறமுடிகிறது. கொரோனா ஊரடங்கு தடைகளையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து தொழில் செய்ய முடிகிறது. வங்கி கணக்கு என்பது ஒவ்வொரு மனிதனுடைய உரிமை. அது எல்லாருக்கும் முக்கியமான ஒன்று. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தனது வங்கி சேவையில் 74% அரசு நிர்ணயித்த முக்கிய துறைகளுக்கு கடன் கொடுத்துள்ளது. அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட தொழில்கள் அனைத்தும் வளரும் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.

கொரோனா 2-வது அலை ஊரடங்கில் கூட எந்தவித கூடுதல் பிணையம் இல்லாமல் கடனுதவி கொடுக்க அரசு உதவியது. அதன்காரணமாக தற்போது தொழில்கள் அனைத்துமே  தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாட்டில் தற்போது 73 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா முதல் இரண்டு அலையையும்  திறம்பட எதிர்கொண்ட மத்திய அரசு மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் சிறிய சிறிய மருத்துவமனை உட்பட அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் வசதிகளை ஏற்படுத்த நிதிஉதவி வழங்கி உள்ளது. தனியார் வங்கிகள் அரசு அறிவிக்கக் கூடிய நல்ல திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.