“தமிழ் புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி இருக்கும்....” அண்ணாமலை கூற காரணம் என்ன?!!

“தமிழ் புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி இருக்கும்....” அண்ணாமலை கூற காரணம் என்ன?!!

தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14.ம் தேதி திமுக-வின் 27 முக்கிய புள்ளிகளின் 2 லட்சத்தி 24 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து பட்டியல் வெளியிடப்படும் என்றும் அன்று தமிழகத்தில் அரசியல் புரட்சி ஏற்படும் என்றும்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு  தகவலை வெளியிட்டுள்ளார்.

அய்யன் திருவள்ளுவர்:

தென்காசி வாய்க்கால் பாலம் அருகே பாஜக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது.  இந்த  கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க, பொய்களை சொல்லியே  அரசியல் நடத்தி வருவதாக விமர்சித்தார்.  தாய் மொழியை கற்க வேண்டும் என்று கூறும் தி.மு.க, பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பேசிய தமிழை கண்டுபிடிக்க அய்யன் திருவள்ளுவரை தான் அழைக்க வேண்டும் என பேசியுள்ளார்.

ஏமாற்று வேலை:

செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது ஏமாற்று வேலை என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.  தமிழகத்தில் சாராயம் விற்பதின் மூலம்  கிடைக்கும் வருவாயில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கடனாக கொடுத்தால்  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி விடலாம் என்று தெரிவித்தார்.

அரசியல் புரட்சி:

மேலும் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று திமுகவில் உள்ள 27 முக்கிய நபர்களின் சொத்து மதிப்பு  வெளியிடப்படுகிறது எனவும்  அதன் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி இருக்கும் என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக கூறினார்.

பங்கேற்றோர்:

இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மகளிரணி நிர்வாகி சசிகலாபுஷ்பா உள்ளிட்ட மாநில, மாவட்ட, நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க:  “கோவையின் மீது அக்கறை கொண்டு.....” அமைச்சர் செந்தில் பாலாஜி!!