அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி

அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டபேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசு கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி

சட்டபேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 1 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரியும், 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளதாகவும், இது தவிர தொழில்நுட்பக் கல்லூரிகள், பல வகை தொழிநுட்பக் கல்லூரிகளும் உள்ளது என்றும் கூறினார்.

மேலும், பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளது என்றும், அரசுக்கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளித்தும், பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளைத் தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்