தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள்... கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் பாய்ந்தது...

தலைவர்கள் மீதும், பெண் பத்திரிகையாளர்கள் மீதும் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்த கிஷோர் கே.சாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள்... கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ் பாய்ந்தது...
பா.ஜ.க ஆதரவாளரான கிஷோர் கே. சாமி முன்னாள் முதல்வர்கள் மற்றும் தற்போதைய தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கடந்த 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை தரக்குறைவாகப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஜூன் 16 ஆம் தேதி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
 
இந்நிலையில் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவரை சமூக வலைதளத்தில் மத ரீதியில் சித்தரித்து தரக்குறைவாக பேசியதாக மீண்டும் மத்திய குற்றப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கிஷோர் கே சுவாமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வரும் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து அவர் செங்கல்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் ஜாமீன் கோரி தாம்பரம் நீதிமன்றத்தில் கிஷோர் கே சாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்  கிஷோர் கே. சாமி மீது இன்று குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.