பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு...! எந்தெந்த பல்கலைக்கழகம்...?

பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு...! எந்தெந்த பல்கலைக்கழகம்...?

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ள நிலையில், வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து புயலாக வலுப்பெற்றது. தற்போது  தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் 12 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இந்த புயலானது, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மகாபலிபுரத்தைச் சுற்றிலும், டிசம்பர் 9 - ஆம் தேதி நள்ளிரவில் மணிக்கு 85 கிமீ வேகத்தில் மணிக்கு 65-75 கிமீ வேகத்தில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09.12.2022) மற்றும் நாளை மறுநாள் (10.12.2022) விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதை தொடர்ந்து பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆகியவற்றின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது . மேலும், நாளை நடைபெறவிருந்த டிப்ளமொ செமஸ்டர் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் டிசம்பர் 16 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூட்டம்...! சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்...!