திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு கிடையாது...

திறந்தவெளி பல்கலைகழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அரசு துறைகளில் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திறந்தவெளி பல்கலைகழகங்கள்  மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு அரசு துறைகளில் பதவி உயர்வு கிடையாது...

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் இரண்டாம் நிலை சார் பதிவாளராக தேர்வான வேலூர் மாவட்டம் சோழிங்கரைச் சேர்ந்த செந்தில்குமார், துறைரீதியான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளதால் முதல் நிலை சார் பதிவாளராக பதவி உயர்வு வழங்க கோரி அரசுக்கு விண்ணப்பித்தார். ஆனால், கல்லூரிக்கு சென்று இளங்கலை பட்டப்படிப்பை படிக்காமல், திறந்தவெளி கல்வி மூலம் பட்ட மேற்படிப்பை முடித்துள்ளதால், பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற தகுதியில்லை என வணிகவரித் துறை அவரது கோரிக்கையை நிராகரித்தது. 

இதனை எதிர்த்து செந்தில்குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு நிர்ணயித்துள்ள தகுதி என்பது, பணி நியமனத்திற்கானது தானே தவிர, பதவி உயர்வுக்கு அல்ல என கூறி, அந்த உத்தரவை ரத்து செய்ததுடன், பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமார் பெயரை சேர்க்கவும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவுத் துறை தலைவரும், வணிகவரித் துறை செயலாளரும் உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தனர். 

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலை பல்கலைக்கழகம் அல்லது தொலைதூர கல்வி மூலம் பட்டப்படிப்பு முடிக்காமல், பட்ட மேற்படிப்பு படித்தவர்களை பணி நியமனத்துக்கோ, பதவி உயர்வுக்கோ பரிசீலிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சுட்டிக்காட்டி, பதவி உயர்வு பட்டியலில் செந்தில்குமாரை சேர்க்க வேண்டுமென்ற  தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.