"மனு வரல...! அனுமதி தரல...!"

"மனு வரல...! அனுமதி தரல...!"

மதுரை, மேலூர், நெல்லுக்குண்டுபட்டிகிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் மஞ்சுவிரட்டு நடத்த தடை விதிக்க கோரிய வழக்கு...


மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த முருகேசன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்‌. அந்த மனுவில், "மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவில் உள்ள கம்பளிப்பட்டி, நாகப்பன்சீவல்பட்டி, கந்துகப்பட்டி, தாயம்பட்டி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது நெல்லுக்குண்டுபட்டி கிராமமாகும். இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு 07.04.2023 முதல் 09.04.2023 வரை கோயில் திருவிழாவை நடத்த கிராம மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் திருவிழா சமயத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். எனினும், கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டின்  போது  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது  சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் உருவானது. அதனைக்கருத்தில் கொண்டு ஊர் கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசித்து இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டாம் என முடிவு செய்தோம். இருப்பினும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டும்  ஐந்து ஊர் மக்களின் ஒருமித்த முடிவுக்கு கட்டுப்படாமல் ஜல்லிக்கட்டு  நடத்தியே ஆகவேண்டும் என மனு அளித்திருந்தனர்.
அவ்வாறிருக்க , ஜல்லிக்கட்டு நடந்தால் கிராமத்தில் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் நெல்லுக்குண்டுபட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டினை நடத்த தடை விதிக்குமாறு உத்தரவிடவேண்டும்", என கோரியிருந்தார். அதையடுத்து  அரசுத் தரப்பில், மனுதாரர் கூறியது போன்று மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி கோரி எந்த மனுவும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது‌.  இதனையடுத்து நீதிபதிகள், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கினை முடித்து வைத்தனர்.


---------------------------------------------------------------