தமிழகத்தில் நூலகங்களை திறக்க அனுமதி... நூலகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நூலகங்களை திறக்க அனுமதி... நூலகங்கள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...
போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, தினந்தோறும் நூலகங்களை மூடுவதற்கு முன்பு வாசகர்கள் பயன்படுத்திய இருக்கைகள், மேஜைகள், நாற்காலிகள், நூல்கள் மற்றும் தொடர்புடைய இடங்களை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை என்றும், அந்த பகுதியில் இருந்து வரும் வாசகர்களை நூலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
15 வயதிற்கும் குறைவாக உள்ள சிறார்கள், கர்ப்பிணிகள், 65 வயது மேற்பட்டவர்கள் நூலகம் வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நூலகத்திற்கு வரும் வாசகர்கள், நூலகப் பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என கூறியுள்ள தமிழக அரசு,
 
வாசகர்கள் கோரும் நூல்களை, நூலகப் பணியாளர்கள் நூல் அடுக்கிலிருந்து எடுத்து வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கும் நூலகர் கட்டாயம் கையுறை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
 
மேலும், வாசகர்கள் எடுத்து வரும் சொந்த நூல்கள், மடிக்கணினி, மற்றும் இதர பொருட்களை, வேறு வாசகர்களுடன் பகிர அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.