கோவை: மாணவர்களுக்கு சிக்கல்...பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பெற்றோர்கள் கோரிக்கை!

கோவை: மாணவர்களுக்கு சிக்கல்...பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு பெற்றோர்கள் கோரிக்கை!

கோவை மாவட்டம் மருதமலை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்படாததால் வேலைவாய்ப்பிலும் உயர்கல்வியிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்களில் கடந்த 2 வருடங்களாக பட்டம் வழங்கப்படாததால் மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் பட்டமளிப்பு விவகாரம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் கடந்த 2 ஆண்டு காலமாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை எனவும், இதன் காரணமாக கல்லூரிகளில் படித்து முடித்த 9 லட்சத்து 29 ஆயிரத்து 542 மாணவர்கள் பட்டமளிப்பு விழா சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக ஆளுநர் தேதி தராததன் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பட்டமளிப்பு விழாவில் வட இந்தியாவைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் விரும்புவதாகவும், அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் தேதி கிடைக்காததன் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக கருதுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இதையும் படிக்க : பட்டமளிப்பு விழா நடக்காததற்கு ஆளுநர் தான் காரணம்...பொன்முடி குற்றச்சாட்டு!

பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தமிழக அரசின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஆளுநர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

முன்னதாக, கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு கடந்தும் பட்டங்கள் வழங்கபடாததால் வேலைவாய்ப்பில் சேர்வது, மேற்கொண்டு உயர்கல்வி பயில்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டும் எனவும், ஆளுநர் மாணவர்களின் எதிர்காலத்தில் கவனம் செலுத்தி பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.