சட்டத்திற்குட்பட்டு முடிவெடுங்கள்... ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் உத்தரவு...

மனுதாரரின் மனு குறித்து தமிழக உள்துறை செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சட்டத்திற்குட்பட்டு முடிவெடுங்கள்... ரவிச்சந்திரன் பரோல் வழக்கில் உத்தரவு...

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில்,"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக மதுரை மத்திய
சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார்.

இந்த வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பர் 6ல் தீர்ப்பு வழங்கியது.

அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தமிழக ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது.

இந்த நிலையில் எனது கண்ணில் 2019 ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக எனது மகனு ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பு வழங்க கோரி 2 முறை மனு அளித்தேன். ஆனால் இரண்டு முறையும் எனது மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனது மற்றொரு கண்ணில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் எனக்கு வயது முதிர்வு என்பதால் என்னை கவனிப்பதற்கு எனது மகனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்க கோரி மீண்டும் 2021 ஜூன் 26-ஆம் தேதி மனு அளித்துள்ளேன். இந்த மனுவை பரிசீலித்து 28 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், பாரதிதாசன், நிஷாபானு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மனு குறித்து தமிழக உள்துறை செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு 6 வாரத்திற்குள் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டனர்.