தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட் மழை எச்சரிக்கை...

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின்  மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்  மழை எச்சரிக்கை...

குமரிக்கடல் மற்றும் இலங்கை கடற் பகுதியை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்றும்,அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, தென்காசி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், 3ஆம் தேதி அன்று மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  தீபாவளி அன்று வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.