இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது...அன்பில் மகேஷ் விளக்கம்!
காய்ச்சல் பீதியால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை:
தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தில் நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி புதிய கட்டிடத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை என்ன வழிமுறை சொல்கிறார்களோ அதை பின்பற்றி தான் பள்ளிக்கல்வித்துறை செயல்படுவதாக கூறினார். எங்கெல்லாம் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருக்கிறதோ அங்கே மருத்துவ முகாம்கள் நடத்தி சிகிச்சை அளிக்கப்படும் என கூறிய அவர். காய்ச்சல் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியம் இல்லை என்றும், இனி சுகாதாரத்துறை என்ன கூறுகிறார்களோ அதை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிக்க: நீங்கள் சைவமா? வைணவமா? அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய ஆ.ராசா!
காலை உணவு திட்டம்:
தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் தொடங்கி வைத்த காலை உணவு திட்டம் மூலம் 1,545 பள்ளிகளில் பயிலும், ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவ மாணவிகள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில், காலை உணவு திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார் . மேலும் தொடக்கக் கல்விதான் கற்றலுக்கு அடிப்படை என்பதால் அதில் அதிக அளவு கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.