மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

தேசிய பாதுகாப்பு படையினர் மதுரை பாண்டி கோவில் பகுதியில் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையை ஹெலிகாப்டர் மூலமாக நேற்று மேற்கொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்.. தேசிய பாதுகாப்புப் படையினர் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

மதுரையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள  மதுரை மீனாட்சி அம்மன் கோவில், விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். அக்குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அங்குள்ள உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில் மதுரை பாண்டி கோவில் சுற்றுச் சாலை அருகே உள்ள திடலில் தேசிய பாதுகாப்பு படையினர் நேற்று ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.

அப்போது பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடைபெறுகின்ற போது மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்தும், பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகையை நிகழ்த்திக் காட்டினர்.

150க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் கலந்துகொண்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். இந்த ஒத்திகையை தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீவிரவாத தாக்குதலின் போது மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இக்குழுவினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.