மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் உந்துகுழாய் இணைப்பு பணிகள் காரணமாக தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 3 மண்டலங்களில் ( 08.08.2023) அன்று காலை 8 மணி முதல் (09.08.2023) வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் அளித்துள்ள செய்தி அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பாக, கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச்செல்லும் பிரதான குடிநீர் உந்துகுழாயை இணைக்கும் பணியானது ஸ்டெர்லிங் சாலையில் நடைபெற்று வருகிறது.
இதனால் 08.08.2023 அன்று காலை 6 மணி முதல் 09.08.2023 அன்று காலை 6 மணி வரை தேனாம்பேட்டை ( மண்டலம் - 9) , கோடம்பாக்கம் ( மண்டலம் -10 ) மற்றும் அடையாறு ( மண்டலம் -13 ) ஆகிய மூன்று பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water ) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றூம் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் என்றும், குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.