ஆரணியில் ரூ.15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஆரணி தொகுதியில் 15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

ஆரணியில் ரூ.15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இது குறித்து சட்டபேரவையில் உறுப்பினர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,

திருவண்ணாமலையில் 15.56 ஏக்கரில் 13 தொழிற்மனைகள் மற்றும், 16 தொழிற்கூடங்களுடன் தொழிற்பேட்டை இயங்கி வருவதாகவும், பெரியகோள்பாடி கிராமத்தில் 57. 18 ஏக்கர் பரப்பளவில் 177 தொழில் மனைகள் கொண்ட புதிய தொழிற்பேட்டைகள் மேம்பாட்டு பணிகள் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

முதற்கட்டமாக முப்பத்திமூன்று தொழில் மனைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தொழில் முனைவோரின் தேவைக்கேற்ப இதர மனைகள் மேம்படுத்தப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார்.

மேலும், ஆரணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சாலை வசதியுடன் கூடிய தகுதியான நிலம் கண்டறிந்து தெரிவிக்கும் பட்சத்தில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குறைந்தபட்சம் 20 தனியார் தொழில் முனைவோர்கள் சேர்ந்து தகுதியான நிலத்துடன் தொழிற்பேட்டை அமைக்க முன்வரும் பட்சத்தில் அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் மாநில அரசின் மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.