14 வயதான 9ம் வகுப்பு சிறுமிக்கு திருமணம்.. தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர்!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் குழந்தை திருமணத்தை தடுத்த மாவட்ட ஆட்சியர் சிறுமியை படிக்க வைக்குமாறு பெற்றோரை சந்தித்து அறிவுரை வழங்கினார்.
கணேஷ் நகரைச் சேர்ந்த 22 வயதான கூலித்தொழிலாளி பிரகாஷ் என்பவரின் வீட்டில், அவரது உறவினரான 14 வயதான 9ம் வகுப்பு மாணவி தங்கியிருந்து படித்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் இன்று அதிகாலை திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் சமூக நலத்துறை குழந்தைத் திருமண தடுப்பு குழுவினர் சம்பவ இடம் சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் பிரகாஷ் வீட்டுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், இருவர் வீட்டாரையும் சந்தித்தார்.
அப்போது பிள்ளைகள் படிக்க அரசு பல சலுகைகள் வழங்கியுள்ளதாகவும் படிக்கும் வயதில் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் எனவும் அறிவுரை வழங்கினார். தொடர்ந்து இருவரையும் படிக்க வைக்க அறிவுறுத்திய அவர், இருவருக்கும் தேவையான உதவிகளை செய்ய அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20 குழந்தைத் திருமணங்களை ராணிப்பேட்டையில் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.