மங்களூரு குண்டு வெடிப்பு: மதுரையில் NIA தீவிர விசாரணை...!

மங்களூரு குண்டு வெடிப்பு: மதுரையில் NIA தீவிர விசாரணை...!

கர்நாடக மாநிலம், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மதுரையில் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டடு வருகின்றனர்.

மங்களூரு குண்டு வெடிப்பு:

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை என்.ஐ.ஏக்கு மாற்றினர்.

வீட்டில் சோதனை:

இதையடுத்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறி, சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, மைசூரில் இருக்கும் அவரது வீடு மற்றும் உறவினர், நண்பர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு டைரி ஒன்று சிக்கியது. அதில் கைது செய்யப்பட்ட ஷாரிக் தமிழகத்தில் கோவை, சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 4 இடங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்ததாக கூறப்பட்டது. 

இதையும் படிக்க: கண்டிப்பாக 100% ஆதார் எண் இணைக்க வேண்டும்...!

மதுரையில் விசாரணை:

இதைத்தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மதுரையில் சந்தேகிக்கும் பகுதிகளாக கூறப்பட்ட மதுரை டவுண்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கு விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஷாரிக் நடமாட்டம் இருந்திருக்க கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணை:

அப்போது, மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை யாரும் சந்தித்து பேசினார்களா? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தினார்களா? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக தங்கு விடுதிகளில் உள்ள வருகைபதிவேடு உள்ளிட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.